1. Home
  2. தமிழ்நாடு

52 ஆண்டுக்கு பின் கும்பகோணம் சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் சிவராத்திரி பூஜை !!

52 ஆண்டுக்கு பின் கும்பகோணம் சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் சிவராத்திரி பூஜை !!

கும்பகோணம் சங்கர மடத்தில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு, காஞ்சி சங்கராச்சாரியார் நடத்தும் மகா சிவராத்திரி பூஜை நடைபெறவுள்ளது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் வழிவழியாக சந்திரமவுளீஸ்வரர் பூஜை தினமும் நடத்துவது வழக்கம். சங்கராச்சாரியார் சுவாமிகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் தம்முடன் அந்த சுவாமியையும் கொண்டுச்சென்று முகாமிட்டுள்ள இடங்களில் பூஜை செய்வது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 1969ஆம் ஆண்டு காஞ்சிசங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பகோணத்துக்கு வந்திருந்தார். அப்போது, சங்கர மடத்தில் தங்கியிருந்து அங்கு மகா சிவராத்திரி பூஜையை காஞ்சி சங்கராச்சாரியார் நடத்தினார்.

இந்நிலையில், தற்போது கும்பகோணம் சங்கர மடத்தில் தங்கியுள்ள காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மார்ச் 11ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு, அங்கு நான்கு கால பூஜைகளை நடத்த உள்ளார்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, கும்பகோணம் சங்கர மடத்தில் காலை, மாலை வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம், சத்சங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மேலும், இன்று காலை ஏகாதசி ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், வசோதாரா ஹோமம் நடத்தப்பட்டு, சுவாமிகளுக்கு மகாபிஷேகமும், மாலை 4.30மணியளவில் ரெட்டிராயர் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீ ராமமந்திரத்தில் ஆச்சார்ய சுவாமிகளுக்கு 108 தங்கக் காசுகளால் ஸ்வர்ண பாத பூஜை, புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சங்கர மடம் கைங்கர்ய சபாவினர் செய்து வருகின்றனர்.



newstm.in

Trending News

Latest News

You May Like