ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகி கொலை.. பாஜக முன்னாள் நிர்வாகி கைது.. அவதூறு பரப்பியதால் பதற்றம் !
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர் 87 வயதான முதியவர் கோபாலன். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், அங்குள்ள உத்திராதி மடத்தின் பவர் ஏஜென்ட் ஆக இருந்து வந்தார். இவருடைய மகன் வாசுதேவன் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஆவார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் தனது வீட்டு வாசலில் அவர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்து விட்டு தப்பியோடினர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் அக்கும்பல் தப்பியோடியது. பின்னர் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டுசென்றப்போதும் அவர் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த, பா.ஜக முன்னாள் நிர்வாகியான சரவணன் என்பவர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர், உத்திராதி மடத்தின் அருகில் மடத்தின் நிலத்தில் 12 கடைகள் இருந்தன. மடத்தை விரிவாக்கம் செய்வதற்காக கோபாலன், கடைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
அனைத்துக் கடைக்காரர்களும் காலிசெய்த நிலையில், சரவணன் மட்டும் தனது தையல் கடையைக் காலி செய்ய மறுத்தார். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி கோபாலன் காலி செய்ய நெருக்கடி கொடுத்தார். இதனால் கோபாலனைப் பழிவாங்க அவரை வெட்டிப் படுகொலை செய்ததாக சரவணன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து சரவணன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து சிலர் அவதூறு பரப்பியதாக புகார் எழுந்துள்ளது. இஸ்லாமியர்கள் இக்கொலையை நிகழ்த்தியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in