சீனாவில் இருந்துகொண்டே இந்தியாவில் ரூ.150 கோடி சுருட்டல்!! செயலிகள் மூலம் பெரும் திட்டம்!!
சீனாவில் இருந்து, செல்போன் செயலிகள் மூலம், 2 மாதத்தில் 5 லட்சம் இந்தியர்களிடமிருந்து 150 கோடி ரூபாய் சுருட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் இந்தியா உள்பட உலக நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதற்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில், தற்போது ஆன்லைன் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில், உடனடி வருவாய், இரு மடங்கு ஆதாயம் என ஆசைகாட்டி சீனாவில் இருந்து பெரும் மோசடி இந்தியாவில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த Power Bank, EZPlan, EZCoin, Sun Factory, Lightening Power Bank உள்ளிட்ட செயலிகளை நம்பி, 300 ரூபாயில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
அதிலும் Power Bank ஆப், கூகுள் பிளே ஸ்டோரில், டிரென்டிங்கில் 4ஆம் இடத்திற்கும் வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் Power Bank, EZPlan குறித்து பரப்பப்பட்டதால் டெல்லி சைபர் கிரைம் போலீசார் அதுபற்றி ஆய்வு நடத்தியபோது, சீனாவை சேர்ந்த சர்வரில் இருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி மூலம் திரட்டப்பட்ட பணத்தை, சீனாவை சேர்ந்த மோசடி கும்பலுக்கு அனுப்ப, இங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்குகளும் செயல்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் இதற்கு உடந்தையாக இருந்த 2 சார்ட்டடு அக்கவுன்டன்டுகள், ஒரு திபெத்திய பெண் உள்ளிட்ட 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் 11 கோடி ரூபாயை முடக்கியுள்ளனர்.
newstm.in