ஆதரவற்றோர்களுக்கு நெல்லை மாநகராட்சி செய்த நெகிழ்ச்சி சம்பவம் !!
கொரானா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் அடைந்து கிடப்பதால் அவர்களுக்கு மன உளைச்சலும் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றகள் பலரும் ஊரடங்கு சமயத்தில் உணவு, இருப்பிடம் இன்றி தவித்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில், நெல்லையில் இருப்பிடமின்றி தவித்து வந்த 105 பேரை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். அவர்கள் அனைவரும் பெண்கள் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு சமயத்தில் இருந்து ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க நெல்லை மாநகராட்சி திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியது.
அதுவும் கொரானா பரவாமல் தடுக்க தனிநபர் இடைவெளியுடன் கூடிய திரையரங்காக இது அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கையாக அவர்கள் அனைவருக்கும் மாஸ்குகள் வழங்கப்பட்டதோடு, சேர்களில் ஒருவருக்கு ஒருவர் குறிப்பிட்ட இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு அவர்களை மகிழ்விப்பதற்காக திரைப்படத்தை திரையிட்டுள்ளனர்.
இங்கே முதல் திரைப்படமாக எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்பட்டுள்ளது. ஆதரவற்றோரின் மனநிலையை கருத்தில் கொண்டு, நெல்லை மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Newstm.in