1. Home
  2. தமிழ்நாடு

ஆர்எஸ்எஸ் தலைவரின் வருகைக்காக சாலைகளை சரி செய்யும்படி சுற்றறிக்கை வெளியிட்ட உதவி ஆணையர் பணியிலிருந்து விடுவிப்பு..!!

ஆர்எஸ்எஸ் தலைவரின் வருகைக்காக சாலைகளை சரி செய்யும்படி சுற்றறிக்கை வெளியிட்ட உதவி ஆணையர் பணியிலிருந்து விடுவிப்பு..!!


மதுரையில், ஆர்எஸ்எஸ் தலைவரின் வருகையை ஒட்டி சாலைகளை சரி செய்து, தெரு விளக்குகளை சரி பார்க்கும்படி சுற்றறிக்கை வெளியிட்ட மாநகராட்சி உதவி ஆணையர், அவரது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை மதுரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையடுத்து, மதுரை மாநகராட்சி பணியமைப்பு பிரிவு உதவி ஆணையர் சண்முகம், அனைத்து மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அந்தச் சுற்றறிக்கையில், “மோகன் பகவத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அவர் கலந்துகொள்ளும் விழா நடக்கும் இடம் வரையிலான சாலைகளையும், தெரு விளக்குகளையும் சரிசெய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்தன. அத்துடன், “திமுக அரசு, ஆர்எஸ்எஸ்-க்கு பயப்படுகிறதா..?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இது குறித்து மதுரை மாநகராட்சியின் ஆணையர் கா.ப.கார்த்திகேயனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இஸட் பிளஸ் பாதுகாப்பு உள்ளவர்கள் வருகை தரும் போது வழக்கமாக செய்யும் ஏற்பாடுகள் தான் இவை. ஆனால், சுற்றறிக்கையில் அந்த உதவி ஆணையர் இதையெல்லாம் விரிவாக எழுதிவிட்டார். மற்றபடி, விசேஷமாக எதுவும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

இதற்கு சிறிது நேரத்தில் மதுரை மாநகராட்சி சார்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “இஸட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும் போது அது தொடர்பான விதிகளின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும்.

அதன் அடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின்படியிலான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறப்புப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

வழக்கமான நிர்வாக நடைமுறைகளின்படி உயர் அலுவலர்கள் அனுமதியைப் பெறாமல் தன்னிச்சையாக, தவறுதலாக புரிந்து கொள்ள படும்படி சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மதுரை மாநகராட்சி வெளியிட்ட உத்தரவில், உதவி ஆணையரான சண்முகம் 21ம் தேதி பிற்பகலிலேயே மதுரை மாநகராட்சிப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது.

Trending News

Latest News

You May Like