1. Home
  2. தமிழ்நாடு

கோட்டையை கண்டுபிடிச்சு தாங்க… விழுப்புரம் நகராட்சி ஆணையரிடம் மனு..!

கோட்டையை கண்டுபிடிச்சு தாங்க… விழுப்புரம் நகராட்சி ஆணையரிடம் மனு..!


விழுப்புரம் கோட்டை அமைந்திருந்த இடத்தை ஆய்வு செய்து தெரிவிக்க தமிழக அரசின் தொல்லியல் துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், தொலைநோக்கு திட்டத்தின் கீழ் புராதன கட்டடங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன்படி, அந்தந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள புராதனச் சின்னங்கள் மற்றும் கட்டடங்கள் குறித்த விவரங்களை அனுப்ப அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நடுநாட்டு வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் விழுப்புரம் நகராட்சி ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பது: “விழுப்புரத்தின் புராதனச் சின்னமாக நகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பீரங்கி திகழ்கிறது.

கிபி 1752ம் ஆண்டு விழுப்புரத்தில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த போரில் இந்த பீரங்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், விழுப்புரத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு பீரங்கி சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது.

மேலும், விழுப்புரத்தின் பழமை வாய்ந்த கட்டடங்களாக திரு.வி. க.வீதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் (1888), கோர்ட் ரோட்டில் உள்ள நீதிமன்ற கட்டடம் (1900), வடக்கு ரயில்வே காலனியில் உள்ள ரயில்வே லோகோ ஷெட் (1990 தொடக்கத்தில் கட்டப்பட்டு இருக்கலாம்) ரயில்வே அருங்காட்சியகமாக பாதுகாக்கப்பட வேண்டிய இடமாகும்.

வடக்கு ரயில்வே காலனியில் உள்ள ரயில்வே இன்ஸ்டிடியூட் (1905), திரு.வி.க.வீதியில் உள்ள பழைய ஆசிரியர் பயிற்சி பள்ளி கட்டடம் (1905), அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கலைநயம் மிக்க கட்டடம் (1907), அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடம் (1928), பண்டிட் ஜவஹர்லால் நேரு வீதியில் உள்ள பிரசவ விடுதி (1946) ஆகிய புராதனக் கட்டடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஆற்காடு நவாப் காலத்தில் விழுப்புரத்தில் கோட்டை இருந்துள்ளது. 1803ம் ஆண்டு இக்கோட்டை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கோட்டை அமைந்திருந்த இடத்தை ஆய்வு செய்து தெரிவிக்க தமிழக அரசின் தொல்லியல் துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like