1. Home
  2. தமிழ்நாடு

பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள்.. பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு..!

பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள்.. பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு..!


தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் என்பவரின் பெரும் முயற்சியால் கட்டப்பட்டது.

தென் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கவும், வறண்டு கிடந்த நிலங்கள் வளம் பெறவும் லண்டனில் உள்ள தனது சொத்துக்களை விற்று இந்த அணையை கட்டினார் பென்னிகுவிக். இதனால், ‘முல்லைப்பெரியாறு அணையின் தந்தை’ என பென்னிகுவிக் அழைக்கப்படுகிறார்.

தேனி மாவட்ட மக்கள் சாதி, மதம் கடந்து பென்னிகுவிக்கை கடவுள்போல் வணங்கி வருகின்றனர். பென்னிகுவிக் பிறந்த நாளான ஜனவரி 15-ம் தேதி தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ‘பென்னிகுவிக் பொங்கல்’ என்ற பெயரில் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில் பென்னிகுவிக்கின் 181-வது பிறந்தநாள் இன்று தேனி மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. லோயர் கேம்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் குவிந்து வருகின்றனர்.

அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன் ஆகியோர் இன்று காலையில் பென்னிகுவிக் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செய்தனர்.

தேனி பாலார்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் நினைவு கலையரங்கம் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். தேனி பென்னிகுவிக் நகர், கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் உள்பட பல இடங்களிலும் பென்னிகுவிக் பிறந்தநாளை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like