கொரோனா பாதித்த வடமாநில சிறுவன் தப்பி ஓட்டம்.. வடசென்னையில் பரபரப்பு !
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. சென்னையில் வடசென்னை மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை காசிமேடு சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த 35 சிறுவர்களுக்கு, கடந்த 7ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர் தப்பியுள்ளார்.
இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவன் எங்கு சென்றார், எதனால் தப்பியோடினார் என்று எதுவும் தெரியாமல் குழம்பிய மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து 4 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.
newstm.in