இனி பாதுகாப்பு கவச உடைக்கு தட்டுப்பாடு இருக்காது.. உலகிற்கே வழிகாட்டும் கோவை !
மருத்துவர்கள், செவிலியர்கள் அணிந்து கொள்ளும் பாதுகாப்பு உபகரண உடைகள் மறுமுறை உபயோகப்படுத்தும் வகையில் கோவையில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனம் தயார் செய்துள்ளது.
கொரோனா வந்த நாள் முதல் மாஸ்க், சானிடைசர், ஹண்ட் வாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு மவுசு கூடியது. நாள்கள் செல்ல செல்ல இதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
-
அதுபோல் கொரோனா தொற்று நோய் என்பதால் அந்த நோய் பாதித்தவர்களை கையாளும் சுகாதாரத் துறை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் எனப்படும் ஒரு ஆடையை அணிந்திருப்பார்கள். இவை ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடியதாகும். உலக நாடுகள் எங்கும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதனால் மாஸ்க், பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் இவை சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் தட்டுப்பாடு கடுமையானது.
இந்த நிலையில் அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள நிறுவனங்களை வைத்து இவற்றை தயார் செய்யும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.
அதன்படி தமிழகத்தில் கோவையில் உள்ள ஒரு ஜவுளி உற்பத்தி நிறுவனம் மறுமுறை பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்துள்ளது. இவற்றில் குளோரின் அதிகமாக இருப்பதால் இவற்றை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூறுகையில், இந்த ஆடைகளை ஒரு முறை இரு முறையல்ல , 80 முறை துவைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவற்றை 80 முறை பயன்படுத்தினாலும் அந்த ஆடையில் குளோரினை மறுஉருவாக்கம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.அந்த துணியில் குளோரின் கிருமிநாசினி பண்புகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன.
முதல் முறை துவைக்கும் போது இருக்கும் இந்த பண்பானது 80 முறை துவைத்த பிறகும் இருக்கும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தகவல் தெரிவித்தார்.
newstm.in