சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமல்..! அதிருப்தியில் வியாபாரிகள்..!
தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலானது. சுங்கச்சாவடிகளுக்கு ஏற்றவாறு 5 முதல் 12 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 48-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. தற்போது ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால், சுங்கச்சாவடி கட்டணத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சேலம் - உளுந் தூர் பேட்டை- மேட்டுப்பட்டி, திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை, நல்லூர் - சென்னை, திருச்சி - திண்டுக்கல் உட்பட 26 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலானது. இது பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதிகளில் தமிழகத்தில் சுழற்சி அடிப்படையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்படும். ஊரடங்கு உத்தரவால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கட்டண உயர்வை அமல்படுத்த முடியவில்லை என்பதால் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வு, சுங்கச்சாவடிகள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்றவாறு 5 முதல் 12 சதவீதம் வரையில் இருக்கும். ஊரடங்கு நீடிப்பதால், சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலும் குறைவாக இருக்கும். எனவே ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் குறைந்த பாதைகளே செயல்படும் என குறிப்பிட்டனர்.
newstm.in