கோட் சூட் போட்டு பல பெண்களை ஏமாற்றிய காமுகன்!
பெண் மருத்துவரை காதலிப்பது போன்று நடித்து அவரது புகைப்படம், வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவருக்கு பேஸ்புக் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவரை காதல் வலையில் வீழ்த்திய காசி, திருமணம் செய்துக்கொள்வதாக கூறி அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். மேலும், அப்பெண்ணின் வங்கி கணக்கை தனது செல்போன் எண்ணுடன் இணைத்து அதன்மூலம் பணம் எடுத்து வந்துள்ளார்.
பின்னர் ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி கேட்டப்போது பெண் மருத்துவரின் புகைப்படம், வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மிரட்டியுள்ளார். இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் மருத்துவர் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு இணையதளம் மூலம் புகார் அளித்தார். அதன்பேரில் காசியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தப்போது அதில் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காசி மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in