கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து.! முக்கிய நிகழ்வுகள் இணையத்தில் ஒளிபரப்பு..
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் சித்திரை மாதம் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், மதுரையில் இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சித்திரை மாதம் மதுரையில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டதன் காரணமாக திருவிழா நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது. அதன்படி, மே மூன்றாம் தேதி திட்டமிடப்பட்டிருந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், உலகப்புகழ் பெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் ரத்தாகியுள்ளது பக்தர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது.
எனினும், மண்டூக மக ரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் கோவில் பட்டாச்சாரியார்களால் கோவில் உட்பிரகாரத்தில் உரிய பாதுகாப்புகளுடன் நடத்தப்படும்.
இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.இந்த நிகழ்வை www.tnhrce.gov.in என்ற இணையதளம் வழியாகவும், பேஸ்புக் மற்றும் யுடியூப் வழியாகவும், மே 8-ம் தேதி மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை நேரலையாக பக்தர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in