“திமுக கொடுத்த டிவி இப்போதும் இயங்கினால் ரூ.1 லட்சம் தருகிறேன்” : அமைச்சர் அதிரடி!
திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட டிவி தற்போது எந்த வீட்டிலாவது இயங்கும் நிலையில் இருந்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் தருகிறேன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பொருளாதார அரசியல் தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் குழந்தைத்தனமாக பேசுகிறார் என்றும், அவர்கள் ஆட்சியில் இருந்து செல்லும் போது ஒரு லட்ச கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்றனர் என தெரிவித்துள்ளார்.
திமுக இலவச, 'டிவி' வழங்க கடன் வாங்கியது என்றும், ஆனால் அதிமுக வளர்ச்சி பணிக்காக கடன் வாங்குகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் அ.தி.மு.க. ஆட்சியில் கொடுத்த, மிக்சி, கிரைண்டரை, இல்லத்தரசிகள் இன்றும் பயன்படுத்துகின்றனர், ஆனால் திமுக ஆட்சியில் கொடுத்த டிவி வீணாகிவிட்டதாக தெரிவித்தார்.
தி.மு.க., ஆட்சியில் கொடுத்த, 'டிவி' எந்த வீட்டிலாவது, தற்போது நல்ல நிலையில் இருந்தால், ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அமைச்சர் இப்படி கூறும் அதே நேரத்தில் திமுக டிவி கொடுத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை உணர வேண்டும்.
newstm.in