இல்லத்தரசிகள் ஷாக்..! பால் விலை அதிரடி உயர்வு!

இந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் நிறுவனமான அமுல் நிறுவனம் கடந்த வாரம் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்திருக்கும் தருணத்தில் தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சக்ரா, அர்ஜூனா உள்ளிட்ட பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் ஜனவரி மாதம் ஒவ்வொன்றாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தின.
இதேபோல், ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதலும், பிப்ரவரி 3ம் தேதி முதல் ஜெர்சி பால் நிறுவனமும் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5.00ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தின் பிரபல பால் நிறுவனமான ஆரோக்கியா நிறுவனமும் திடீரென பால் விலையை உயர்த்தி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பால் ஒரு லிட்டர் 69 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று முதல் 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்நிறுவனத்தின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பாக்கெட் பால் விலை இன்று முதல் ரூ. 71-க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அரை லிட்டர் பாக்கெட் பாலின் விலையையும் ரூ. 37-ல் இருந்து ரூ. 38-ஆக உயர்த்தி ஆரோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வாறு எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென பால் விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.