10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5:30 மணியளவில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதியில் ஒடிசாவின் பாரதீப்பிற்கு தென்கிழக்கே 700 கி.மீ., தொலைவில் நிலை கொண்டு உள்ளது.
இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 23ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து 24ம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக நிலவக்கூடும். இது வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் , புரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக 24ம் தேதி இரவு 25ம் தேதி காலை இடையே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
இதன் காரணமாக நீலகிரி, கோவை,ஈரோடு திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.