புல்வாமாவில் மீண்டும் கடும் தாக்குதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 2 தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மக்களை மிரட்டி வரும் நிலையில், எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இம்மாதத்தில் மட்டும் பலமுறை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
அவ்வகையில் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவின் கோரிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் நடைபெற்றது.
இறுதியாக இந்த துப்பாக்கிசூட்டில் 2 தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவி செய்த நபர் என மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்தாண்டு மட்டும் இதுவரை ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 50 தீவிரவாதிகளும் 17 பாதுகாப்பு படையினரும் பல்வேறு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
புல்வாமாவில் கடந்த 2019 பிப்ரவரி 14ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in