இன்று அனுமன் ஜெயந்தி : இன்று இதை செய்யுங்க... தடைகள் விலகி, வெற்றிகள் குவியும்..!
மார்கழி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு மற்றும் விரத நாட்களில் ஒன்று அனுமன் ஜெயந்தி ஆகும். அனுமனின் அவதார தினத்தில் விரதம் இருந்து, அவரை வழிபடுவதால் அனுமனின் அருள் கிடைக்கும். தடைகள் விலகி வெற்றிகள் கிடைக்கும், மன அமைதி, செல்வ வளம், வளர்ச்சி, பாதுகாப்பு ஆகிய அனைத்தும் கிடைக்கும். இந்த நாளில் குறிப்பிட்ட வழிபாடுகளை செய்வதால் அனுமனின் அருளை எளிதாக பெற முடியும். அனுமனை மற்ற நாட்களில் வழிபடுவதை விட மார்கழி மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்தி அன்று வழிபடுவது மிக அதிகமான பலன்களை தரும்.
வீரம், பக்தி, ராம சேவை, பேச்சாற்றல், புத்தி கூர்மை ஆகியவற்றிற்கு உதாரணமாக விளங்குபவர் அனுமன். ராம காவியத்தின் ஆணிவேராக விளங்கக் கூடியவர் அனுமன். ராமாயணத்தில், அனுமனின் திறன்களை அழகாக எடுத்துக் கூறும் பகுதிக்கு தான் சுந்தரகாண்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சுந்தரகாண்டத்தை படித்தாலே எப்படிப்பட்ட துன்பங்களும் தீரும். அனுமன் அவதரித்த தினத்தையே அனுமன் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். மார்கழி மாத அமாவாசையில், மூலம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் அனுமன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
2024ம் ஆண்டின் துவக்கமான ஜனவரி மாதத்தில் ஏற்கனவே ஒரு அனுமன் ஜெயந்தி வந்த நிலையில், தற்போது வருடத்தின் கடைசியாகவும் அனுமன் ஜெயந்தி அமைந்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அனுமன் ஜெயந்தி அமைந்துள்ளது. டிசம்பர் 30ம் தேதி காலை 04.44 மணிக்கு துவங்கி, டிசம்பர் 31ம் தேதி காலை 05.03 வரை அமாவாசை திதி உள்ளது. அதே போல் டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 12.19 மணிக்கு துவங்கி, டிசம்பர் 31ம் தேதி அதிகாலை 01.12 வரை மூலம் நட்சத்திரம் உள்ளது. டிசம்பர் 30ம் தேதி அமாவாசை மற்றும் மூலம் நட்சத்திரம் இரண்டும் இணைந்து வருவதால் இந்த நாள் முழுவதுமே அனுமன் ஜெயந்தி வழிபாட்டிற்கு சிறந்ததாகும்.
கல்விக்குரிய உரிய கிரகமாகவும், நவகிரகங்களில் தலைமை கிரகமாகவும் விளங்கக் கூடிய சூரிய பகவான் பயணிக்கும் தேருக்கு முன்னால் பயணித்து சென்று அவரிடம் கல்வி கற்றவர் அனுமன். சொல்லின் செல்வர் என ஸ்ரீராம பிரானாலேயே புகழ்பெற்றவர். அதே போல் மகாலட்சுமியின் அம்சமான சீதா தேவியிடமே சிரஞ்ஜீவி வரம் பெற்றவர் அனுமன். படிப்பில் சிறந்து விளங்கு வேண்டும் என்பவர்கள், தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பவர்கள், நிலையான புகழ், நிலையான பதவி, உயர் பதவி, மற்றவர்களை கவரும் பேச்சாற்றல் உள்ளிட்டவைகளை பெற விரும்புபவர்கள் அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை மனதார வழிபடுவது நல்லது.
ராமர் அளித்த கணையாளியை கொடுத்து சீதையில் மரணத்தை தடுத்தி நிறுத்தியதுடன், அவர் அளித்த சூடாமணியை ராமரிடம் கொண்டு வந்து கொடுத்து இருவரும் மீண்டும் சேருவதற்கு காரணமாக அமைந்தவர் அனுமன். அதனால் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும், சூழ்நிலை காரணமாக பிரிந்து மீண்டும் சேர்ந்து வாழ நினைப்பவர்கள் அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை மனதார வழிபடலாம். ஜாதகத்தில் எந்த கிரகத்தால் பிரச்சனை இருந்து, அதனால் பலவிதமான பிரச்சனைகள் சந்திப்பவர்கள், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டவர் ஆகியோரும் அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபடலாம். கர்ப்பிணிப் பெண்கள் சுந்தரகாண்டம் படிப்பதால் அனுமனை போல் வீரமான, ஆரோக்கியமான, புத்திசாலியான குழந்தை பிறக்கும்.
அனுமன் ஜெயந்தியில் சொல்ல வேண்டிய மந்திரங்கள் :
அனுமன் ஜெயந்தி அன்று அனுமன் சாலிசா, சுந்தரகாண்டம் ஆகியவை படித்து அனுமனை வழிபடுவது மிக சிறப்பு. அப்படி முடியாதவர்கள்,
" அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்"
என்ற பாடலை பாடி வழிபடலாம். இதுவும் சொல்ல முடிாதவர்கள் "ஸ்ரீராம ஜெயம்" என்ற மந்திரத்தை மனதார உச்சரிக்கலாம். ராம உச்சரிக்கும் பக்தர்களுக்கு தேவையான நலன்கள் அனைத்தையும் அனுமன் அருளிடுவார் என்பது நம்பிக்கை.
அனுமன் ஜெயந்தி அன்று வெற்றி கிடைக்க வேண்டும் என்பவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் துளசி மாலை சாற்றி வழிபடலாம். கிரக தோஷங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் வடை மாலை சாற்றி வழிபடலாம். எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் கரைந்து போக வேண்டும் என நினைப்பவர்கள் வெண்ணெய் சாற்றி வழிபடலாம். அனுமன் ஜெயந்தி அன்று வீட்டில் உள்ள அனுமன் படத்திற்கு துளசி சாற்றி, முடிந்தால் வடை மாலை சாற்றி வழிபடலாம். அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடலாம். வால் வழிபாடு செய்பவர் இந்த நாளில் துவக்கலாம். அனுமனின் படம் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து, வெண்ணெய், வடை படைத்து வழிபடலாம். காலை 6 மணி, பிரம்ம முகூர்த்த நேரத்தில் அனுமன் ஜெயந்தி வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு. முடியாதவர்கள் மாலையில் அனுமனை வழிபடலாம்.
அனுமன் விரதம் :
அனுமன் ஜெயந்தி அன்று முதன் முதலில் அனுமனை வேண்டி விரதம் இருந்தவர் பாண்டவர்களின் பத்தினியான திரெளபதி தான். புராண கதைகளின் படி, எவர் ஒருவர் அனுமன் விரதம் இருக்கிறார்களோ அவர்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியும், அமைதியும், செல்வ வளமும் நிறைந்த வாழ்க்கை கிடைக்கும் என பிரம்ம தேவர், வாயு பகவானுக்கு சத்தியம் செய்து வரம் அளித்ததாக சொல்லப்படுகிறது. அனுமன் விரதம் இருந்து, வழிபடுபவர்களுக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைப்பதுடன், அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியது :
பாண்டவர்கள் வனவாசத்தில் மிகுந்த துன்பங்களை அனுபவித்த போது வேத வியாச மகரிஷி, தர்மனுக்கு உபதேசித்த விரதம் இதுவாகும். பகவான் கிருஷ்ணரும், திரெளபதிக்கு, அனுமன் விரதத்தின் கதைகளையும், இந்த விரதம் இருப்பதால் கிடைக்கும் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்தும் எடுதஅதுரைத்துள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த நாளில் விரதம் இருந்து அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாற்றி வழிபடுவதால் அனுமனின் அருள் கிடைக்கும். அதோடு ராம நாமம் உச்சரிப்பதும் அளவில்லாத புண்ணிய பலன்களை தரும்.
தடைகள் விலக செய்ய வேண்டியது :
அனுமன் விரதம் இருப்பவர்கள் 13 முடிச்சுகள் போட்ட கயிறு ஒன்றை எடுத்துக் கொண்டு, அதைக் கையில் வைத்துக் கொண்டு "ஓம் நமோ வாயுநந்தனாய ஓம்" என்ற மந்திரத்தை 9, 11, அல்லது 27 முறை சொல்லி, கையில் அல்லது கழுத்தில் அணிந்து கொண்டால் அவர்களுடன் அனுமன் எப்போதும் இருந்து காப்பார்கள். இந்த கயிறை வீட்டில் வைத்து வழிபடுவதும் நல்ல பலனை தரும். இப்படி அனுமனை வேண்டி முடிச்சுக்கள் போட்டு வேண்டிக் கொண்டால், நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள், சிக்கல்கள் ஆகியவற்றை அவர் நீக்கிடுவார் என்று அர்த்தம். அதோடு கோதுமை தானம் அளிப்பது அனுமனின் அருளையும், பாதுகாப்பையும் தரும். இதை செய்வதால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.