இழப்பீடு வழங்குவதில் அரசு தாமதம்.. மின் கோபுரத்தால் விவசாயி சோக முடிவு..!
காங்கேயம் அருகே கொடுத்த நிலத்திற்கு அரசு இழப்பீடு தரவில்லை என்பதால் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ராமபட்டிணத்தில் வசித்து வந்தவர் விவசாயி ராமசாமி (75). மனைவி இறந்த நிலையில் இரண்டு மகன் உள்ளனர். இவருடைய நிலத்தில் ராசிபுரம் முதல் பாலவடி வரை 180 கிலோமீட்டர் உயர் மின்அழுத்த கோபுரம் கொண்டு செல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது அவருடைய நிலத்தில் 90% வேலைகள் முடிவடைந்த வேளையில் இவருக்கு கொடுக்க வேண்டிய உரிய இழப்பீட்டு தொகையை வழங்காததால் மனவேதனையுடன் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இன்று அதிகாலை தனது விவசாய நிலத்தில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்திலே ராமசாமி தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
நிலத்தை பெற்றுக்கொண்டு உரிய இழப்பீடை வழங்காததால் தற்கொலை செய்து கொண்டதாக கிராம மக்கள் கூறும் நிலையில், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
newstm.in