குட் நியூஸ்..! இனி ஒரே அட்டையில் மெட்ரோ, பேருந்தில் பயணிக்கலாம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/12dceb750a4438918ca040070bcc5fee.jpg?width=836&height=470&resizemode=4)
முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் - சிங்கார சென்னை பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று (06.01.2025) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் அறிமுகம் செய்து வைத்தார்.
இது பற்றி போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு., சிங்கார சென்னை பயண அட்டையானது, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பணமில்லா பரிவர்த்தனை பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தொலை நோக்கு திட்டமாகும். இவ்வட்டையை பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். இந்த முயற்சியானது, தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் நவீனமயமாக்குவதற்கான தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகளில் ஒன்றாகும்.
மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும், ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், இ.டி.எஸ். உபயோகத்தில் உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 அட்டைகள் எஸ்.பி.ஐ. மூலம் கட்டணமின்றி வழங்கப்படும். இவ்வட்டைகள் கோயம்பேடு, பிராட்வே, சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராயநகர், அம்பத்தூர் தொ.பே, அம்பத்தூர் ஓ.டி, அடையாறு, அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், வடபழனி, ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களின் வாயிலாக வழங்கப்படும்.
இவ்வாறு கட்டணமின்றி வழங்கப்படும் அட்டைகளை, ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைன் போர்ட்டல்கள், கைப்பேசி பயன்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் இந்த அட்டையை எளிதாக ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்துகளில் நடத்துநர்களிடமும் ரீசார்ஜ் செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.