ஓபிஎஸ் தொகுதியில் சொன்னதை செய்த தங்க தமிழ்ச்செல்வன்!!
ஓபிஎஸ் தொகுதியில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது பூதிப்புரம் கிராமம். இக்கிராமத்து வழியாகத் தேனியிலிருந்து போடிநாயக்கனூர் வரை அரசு பேருந்து வசதி இருந்தது.
அதனால் பூதிப்புரம், ஆதிபட்டி, வாழையாத்துபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வளையப்பட்டி பொதுமக்கள் பயனடைந்தனர். போதிய வருமானம் இல்லாத காரணத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகம் இந்த வழித்தடத்தில் பேருந்து சேவையைக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்தது.
இதனால், ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேனி போடி நகருக்குச் சென்றுவர இருசக்கர வாகனம், ஆட்டோ, மினி பஸ் மூலம் தங்களது சேவையைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
இந்த சூழலில் தங்களது கிராமத்து வழியாக மீண்டும் பேருந்து சேவை தொடங்கிட பூதிப்புரம் கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலின்போது கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக திமுக சார்பில் போட்டியிட்ட தங்கத் தமிழ்ச்செல்வன் கூறினார்.
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஓபிஎஸ்சிடம் தங்கத் தமிழ்ச்செல்வன் தோல்வி அடைந்தார். இருப்பினும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையிலிருந்த நகரப்பேருந்தைப் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
பத்து ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தங்கள் கிராமத்து வழியாகப் பேருந்து சேவை இயக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
newstm.in