2 ஆண்டுகளாக காதலித்து திருமணத்திற்கு மறுப்பு.. காதலன் வீட்டு முன்பே காதலி சோக முடிவு !
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா(25). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார்.
பெற்றோருடன் வசித்து வந்த அனிதாவுக்கு கெங்கவல்லியில் உள்ள டிஎன்பிஎஸ்சி தனியார் பயிற்சி மையத்திற்கு சென்றபோது அங்கு வந்த 27 வயதான விக்னேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.
2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தனது பெற்றோர் மூலம் அனிதாவை பெண் கேட்க வரப் போவதாக விக்னேஷ் கூறியுள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக திடீரென அனிதாவிடம் இருந்து விலகத் தொடங்கினார்.
விக்னேஷிடம் பேசுவதற்கான முயற்சிகள் செய்தப்போதும் அவர் தவிர்த்ததால் அனிதா அவரது வீட்டிற்கே நேரடியாக சென்றார். அப்போது விக்னேஷின் பெற்றோர் அவரை வீட்டில் மறைத்து வைத்துக் கொண்டு இல்லை என்று கூறியதால் அனிதா கோபமடைந்தார்.
அதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கெங்கவல்லி காவல்நிலையத்தில் காதலனை சேர்த்து வைக்க கோரி புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் அனிதாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விரக்தியடைந்த அனிதா, நேற்று பிற்பகல் 2 மணியளவில் விக்னேஷ் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கையில் வைத்திருந்த விஷத்தை திடீரென அருந்தி மயங்கி விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அனிதாவை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அனிதா உயிரிழந்தார். அதன்பிறகு கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள விக்னேஷைத் தேடி வருகின்றனர்.
newstm.in