குழந்தையை சாலையில் போட்டு பெண் தர்ணா... காவல்நிலையம் முன் பரபரப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன்பு நடுரோட்டில் பெண் ஒருவர் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
உளுந்தூர்பேட்டை அருகே கூவாடு கிராமத்தை சேர்ந்த வள்ளிகந்தன் - அபிராமி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து வள்ளிகந்தன் அபிராமியை தாக்கியதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த அபிராமியின் சகோதரர்கள் 2 பேர் வள்ளிகந்தனிடம் சென்று தட்டிக்கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் அபிராமியின் சகோதரரான ஜானகிராமன் என்பவரை உளுந்தூர்பேட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இது பற்றி அறிந்த அபிராமி தனது 2 குழந்தைகளுடன் போலீஸ் நிலையம் வந்தார். பின்னர் அவர் போலீஸ் நிலையம் முன்பு உள்ள நடுரோட்டில் குழந்தைகளுடன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது சகோதரர் ஜானகிராமனை உடனே போலீசார் விடுவிக்க வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
newstm.in