பிரசவ வலியில் துடித்த மனைவி... தொட்டில் கட்டி சுமந்து சென்ற கணவர்... சாலை வசதி இல்லாத அவலம்!
சாலைவசதிகள் இல்லாததால் கர்ப்பமாக இருக்கும் மனைவியை தோலில் சுமந்து செல்லும் சம்பவம் வேறெங்கெங்கும் இல்லை தமிழகத்தில் தான் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் சுண்டப்பூர் என்ற ஊர் உள்ளது. இங்கு முறையான சாலைகளோ, போக்குவரத்து வசதிகளோ கிடையாது. வெளியூருக்கு செல்லவேண்டுமென்றால் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று பேருந்து ஏறவேண்டிய சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நடந்து செல்லும் பாதைகள் கூட மிக மோசமாக உள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் அந்த ஊரில் வசிக்கும் மாதேஷ் என்பவரின் மனைவி குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்கள் எதுவும் கிடைக்காததால் அவரை தொட்டில் கட்டி கணவர் மற்றும் அவரது உறவினர்கள் தூக்கி சென்றுள்ளனர். சுமார் 5 கி.மீ தூக்கி சென்ற நிலையில், ஒரு டாடா ஏசி வண்டி கிடைக்க அதில் ஏற்றிப் பாதி தூரம் சென்ற நிலையில் குமாரிக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் வண்டியை நிறுத்திவிட்டு குமாரியின் தாயாரே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயையும், குழந்தையையும் அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
Newstm.in
newstm.in