அதிகாரிகள் என்ன ஹெலிகாப்டரிலா போகிறார்கள்?: உயர்நீதிமன்றம் கோபம்
விதிகளை மீறி பேனர் வைத்த விவகாரத்தில் சமூக செயற்பட்டாளர் டிராபிக் ராமசாமி தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதிகாரிகளிடமும், அரசிடமும் உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
சாலையோரங்களில் பேனர்கள் வைப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகள் ஏற்பட காரணமாக அவை அமைவதாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
ஆனால், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்படுவதாகவும், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாகவும், ட்ராபிக் ராமசாமி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு, ஒரு வாரமாக அமைச்சர்களை வரவேற்று விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பேனர்கள் விவகாரத்தில் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு நடப்பதாக அதிருப்தி தெரிவித்தனர். மேலும், "நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் அதிகாரிகள் விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா? அதிகாரிகள் ரோட்டில் செல்கிறார்களா, அல்லது ஹெலிகாப்டரில் செல்கிறார்களா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
newstm.in
newstm.in