விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் மீது உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு தடை கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் அதுமட்டுமின்றி வழக்கு தொடுத்தவர்களிடம் மக்களிடம் வதந்தியை பரப்பி அவநம்பிக்கையை விதைக்காதீர்கள் என்று அவருடைய கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்கரில் இருந்து கரூரில் உள்ள புகழூருக்கு 6,000 மெகாவாட் மின்சாரம் கொண்டு வரும் திட்டத்தை மத்திய மின்தொகுப்பு கழகம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 24,000 கோடி. இந்த திட்டத்தின் கீழ், சத்தீஸ்கரில் இருந்து தமிழகத்துக்கு 1,843 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5,530 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில் திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தடை கோரி விவசாயிகள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தடையில்லா மின்சாரம் பெற உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், மக்களிடம் இதுபோன்ற பொய்யான கருத்துகளை பரப்பி அவர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படும் இடங்களில் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கலாம்.
தங்கள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தும் நீங்களே இத்திட்டத்திற்கு தடை கோருவதில் என்ன நியாயம் உள்ளது? இந்த விஷயத்தில் அனைவருமே சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்” என நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு தொடுத்தவர்களிடம் அவருடைய கண்டனத்தை பதிவு செய்தார்.
newstm.in
newstm.in