நானே மாநிலத் தலைவராக வேண்டும்: பிரித்யங்கிராவிடம் பொன்னார் சங்கல்பம்!!!
கும்பகோணம் அருகே அய்யாவாடியில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலில் , தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவராக வேண்டுமென்ற வேண்டுதலுடன் சங்கல்பமேற்று அதற்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட யாகத்திலும் மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
மாநிலத்தலைவராக வேண்டுமென்று வேண்டி கும்பகோணத்தில் நேற்றிரவு நடத்தப்பட்ட சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டு சங்கல்பமேற்ற மத்திய முன்னாள் அமைச்சரும், தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவருமான பொன். ராதாகிருஷ்ணன், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது, “தமிழக பாஜகவை பொறுத்தவரை தற்போது அமைப்பு தேர்தல்கள் நடைபெற உள்ளன . இந்த அமைப்பு தேர்தல் நடைபெற்ற பின்பு மாநில தலைமைக்கு தேர்தல் நடைபெறும் , அதற்கிடையே தேவைப்படின் மாநில தலைவரை மத்திய கமிட்டி நியமனம் செய்யவும் வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் , சீன அதிபர் ஜீ ஜின் பிங்கும் சந்திக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தமிழகத்திற்கும் சீனத்திற்கும் உள்ள தொன்மையான உறவை நினைவுபடுத்துவதாக அந்த சந்திப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி வாங்கி தர பரிந்துரை செய்யப்படுமா? என கேட்டதற்கு அதற்கு தேவையான நிதியை தமிழக அரசு செய்து வருவதாகவும் கீழடி அகழாய்வுகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் , பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் .
Newstm.in
newstm.in