பாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...
பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
புதுக்கோட்டையில் சமீபத்தில் நடந்த தி.மு.க எம்.எல்.ஏ இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், ‘எம்.ஜி.ஆருக்கு பிறகு, தான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், முதல்வர் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. காலம் கணியும், அரியணை ஏறுவார் என்றும் தெரிவித்திருந்தார். இது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பல நிர்வாகிகளும் அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தலைமைக்கு தமிழக பாஜக பரிந்துரை செய்தது.
என் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில தலைமைக்கு இல்லை என்று கூறிய அரச குமார், தான் பேசியது தொடர்பாக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் மாநில பொறுப்பு தலைவர் கேசவ விநாயகத்திடம் விளக்கம் அளித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று மு.கஸ்டாலினை சந்தித்த அரசகுமார். தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டாலின் குறித்து பேசியதற்காக, என் வாழ்நாளில் கேட்கக்கூடாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை கேட்டுவிட்டேன். மனம் சோர்ந்து இருந்த நேரத்தில், திமுகவில் இணைத்துள்ளேன் என தெரிவித்தார். மேலும், சில காலத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும் என்றும் அதற்கு நான் உழைப்பேன் எனவும் குறிப்பிட்ட அவர், பாஜக தேசிய தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
Newstm.in
newstm.in