அக்னி நட்சத்திரம் முடிந்தும் கொளுத்தும் வெயில்; பல இடங்களில் 100 டிகிரியை தாண்டியது!
அக்னி நட்சத்திரம் முடிந்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி அளவைவிட அதிகமாக பதிவாகி வருவதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, "தமிழகத்தில் மொத்தம் 11 நகரங்களில் 100 டிகிரி அளவைவிட அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்று அதிகபட்சமாக கடலூரில் 106 டிகிரி, திருத்தணி, மதுரை(தெற்கு) ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் 104 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், விமான நிலையம், வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் 103 டிகிரி, தூத்துக்குடியில் 107 டிகிரி என வெப்பநிலை பதிவாகி உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும், அதே நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
கத்திரி வெயில் முடிந்தும் தமிழகத்தில் இதுபோன்று வெப்பநிலை அதிகம் காணப்படுவதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநில அரசின் உத்தரவுப்படி தமிழகத்தில் மழை வேண்டி பல்வேறு கோவில்களில் யாகம் நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in