மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவு !! ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்...
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டணத்தின் பர்வாடா பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டி வளாகத்தில் சைனார் லைப் சயின்ஸ் எனும் தனியார் மருந்து நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த மருந்து நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிலர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. தகவல்அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். மேலும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தையடுத்து மருந்து நிறுவனம் மூடப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதேசமயம் வாயு வேறு எங்கும் பரவவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து நிறுவனத்தில் இருந்து பென்சிமிடாசோல் எனும் வாயு கசிந்துள்ளது. வாயுக்கசிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் 30 பேர் வரை பணியில் இருந்ததாக தெரிகிறது.
முன்னதாக கடந்த வாரம் குர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதில் இரு ஊழியர்கள் பலியானார்கள். இதே போல் கடந்த இரு மாதங்களுக்கு முன் விசாகப்பட்டிணத்தில் எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தில் ஸ்டைரின் வாயுக்கசிவு ஏற்பட்டு 11 பேர் பலியானார்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Newstm.in