சென்னையில் முழு ஊரடங்கு ? தமிழக அரசு பதில் என்ன ?
நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்து வந்த நிலையில் , கடந்த 24 மணிநேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் பாதிப்பு கட்டுக்கடங்காமல் உச்சத்தை பதிவு செய்து வருகிறது. இதனால் ஊரடங்கினை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்தான வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தரி மற்றும் ஆர்.சுரேஷ்குமார் , கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் உள்ளதா ? என கேள்வி எழுப்பினர்.
தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா ? இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.இது தொடர்பாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அளித்த விளக்கம் :
சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான இ-பாஸ் சேவை நிறுத்தப்படவில்லை , நிறுத்தப்படுவதாக கூறுவது வதந்தியே. நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளித்தது.
Newstm.in