முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
நாடாளுமன்ற மாநிலங்களவையின் காங்கிரஸ் எம்பியான மன்மோகன் சிங் டிசம்பர் 26 இரவு 9.51 மணிக்கு காலமானார். இவரது உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரிந்தது.
வயது மூப்பு காரணமாக மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்த மன்மோகன் சிங் மூச்சுத்திணறல் ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்கை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தேசிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் குறித்து ராகுல், ‘மன்மோகன்சிங்ஜி இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது.
கவுர் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நான் ஒரு வழிகாட்டி மற்றும் குருவை இழந்துவிட்டேன். அவரைப் போற்றிப் பாராட்டிய கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வர்’ எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே தனது இரங்கல் குறிப்பில், ’டாக்டர் மன்மோகன்சிங்ஜி! முன்னாள் பிரதமரான உங்கள் மறைவால், தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதியையும், மாசற்ற நேர்மைத் தலைவரையும், ஈடு இணையற்ற அந்தஸ்து கொண்ட பொருளாதார வல்லுநரையும் இந்தியா இழந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்" இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. தாழ்மையான தோற்றத்தில் இருந்து உயர்ந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார்.
அவர் நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றினார், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பாராளுமன்றத்தில் அவர் செய்த தலையீடுகளும் புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்" என கூறி இருந்தார்.
சோனியா காந்தி இரங்கல்:
" மிகவும் துயரமானது. நமது காங்கிரஸ் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா இரங்கல் பதிவு
உள்துறை அமைச்சர் அமித்ஷா,"முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து நாட்டின் நிதி அமைச்சராகவும், பிரதமராகவும் டாக்டர் மன்மோகன் சிங் நாட்டின் நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றினார்.
துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாஹேகுரு அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும், அவரது குடும்பத்தாருக்கு இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை அளிக்கட்டும்" என பதிவிட்டு மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மன்மோகன் சிங் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.