ஒரே பெயர், ஒரே முகவரியில் வெவ்வேறு ஐந்து புகைப்படங்கள் -ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி..!

கே.கே. நகர் 13வது தெருவை சேர்ந்த குணசேகரன்(69) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கு சென்னை போரூர் அருகே ஐயப்பன் தாங்கல், கொளுத்துவாஞ்சேரியில் இவிபி பிரபு அவன்யூ என்ற முகவரியில் (4610) சதுர அடி கொண்ட காலி மனை இருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி வந்து பார்த்தபோது போலியான குணசேகரன் என்பவர் இருபதுக்கு மேற்பட்ட ஆட்களை அழைத்து வந்து காலி மனையில் பாதுகாவலரை தாக்கியும், மதில்சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் குணசேகரனின் உதவியாளர் காசி என்பவர் போலி ஆதார் அட்டையில் உள்ள குணசேகரன் மீது ஜூன் மாதம் 28ந் தேதி மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரின் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே போலி ஆதார் அட்டை தயாரித்த குணசேகரன் நேற்று மீண்டும் நிலத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் காவல்- 100 க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போலி குணசேகரனை மடக்கிப் பிடித்து மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், இரு தரப்பினரிடமும் உண்மை ஆவணங்களை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கொண்டுவரும்படி உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் நிலத்தை ஆக்ரமிக்க வந்த குணசேகரனிடம் போலீசார் துருவி துருவி நடத்திய விசாரணையில் தன் பெயர் குணசேகரன் இல்லை என்றும் என்னுடைய உண்மையான பெயர் ராஜீ என்றும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் எனக்கு எதுவும் தெரியாது என்றும் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள், அதனால் இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.