1. Home
  2. தமிழ்நாடு

சபரிமலையில் முதல் முறையாக இன்று மட்டும் நடை அடைப்பு இல்லை! ஏன் தெரியுமா?

சபரிமலையில் முதல் முறையாக இன்று மட்டும் நடை அடைப்பு இல்லை! ஏன் தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வு நடைபெற இருக்கிறது. அந்த சமயத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரண பெட்டி ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கியது. மகர விளக்கு மற்றும் மகர ஜோதி தரிசனத்தை காண இப்போதிருந்தே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் சபரிமலையில் அலைமோதுகிறது. சபரிமலை ஐயப்பன் சன்னிதான நடை கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதியன்று திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜை, படி பூஜை மற்றும் டிசம்பர் 27 அன்று மண்டல பூஜை நிகழ்வுகள் நடைபெற்று, அன்று இரவே நடை அடைக்கப்பட்டது. இடையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று மட்டும் சூரிய கிரகண நிகழ்வை ஒட்டி காலை 8 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை ஐயப்பன் சன்னிதான நடை சாத்தப்பட்டது.


பின்னர் பரிகார பூஜைகள் நடைபெற்று, மீண்டும் நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து ஐயப்பன் சன்னிதான நடை 27ஆம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு நடைபெறும் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வுகளுக்காக டிசம்பர் 30ஆம் தேதியன்று மீண்டும் திறக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு கேரள அரசின் கெடுபிடி காரணமாக ஐயப்ப பக்தர்களின் வருகை குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால், இந்த ஆண்டு கெடுபிடி இல்லாததால், வழக்கத்தை விட கடந்த ஆண்டு நடைபெற்ற மாதாந்திர படி பூஜை மற்றும் மண்டல பூஜை நாட்களிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதே போல் வரும ஜனவரி 15ஆம் தேதியன்று நடைபெறும் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்கும் அதிக அளவில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, மகர விளக்கு பூஜை நடைபெற இருப்பதை முன்னிட்டு, தற்போதிருந்தே சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே முகாமிட்டு தங்கியுள்ளனர். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜையின் போது சபரிமலை ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டி ஊர்வலம் 13ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது. மேளதாளம் முழங்க இன்று புறப்பட்ட திருவாபரண பெட்டி ஊர்வலமானது, வரும் ஜனவரி 15ஆம் தேதி மாலை சபரிமலை சன்னிதானத்தை வந்தடையும். அதன் பின்னர், 18ஆம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, அன்று மாலை 6:45 மணிக்கு மகர விளக்கு பூஜை நடைபெறும். மகர விளக்கு பூஜை நடைபெறும் அதே நேரத்தில் அருகில் உள்ள பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி தரிசன நிகழ்வு நடைபெறும். அப்போது, சபரிமலை ஐயப்பனே ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாக ஐதீகம். ஆகவே தான் மகர ஜோதி தரிசனத்தை காண பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மகர விளக்கு பூஜைக்க முன்பாக சுவாமி ஐயப்பனுக்கு வழக்கமாக மகர சங்கரம பூஜை நடைபெறும். ஐயப்பனுக்கு நடைபெறும் பூஜைகளில் இது முக்கியமான பூஜை ஆகும். சூரியன் தனுச ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் முகூர்த்த நேரத்தில் நடைபெறம் இந்த மகர சங்கரம பூஜையில் திருவனந்தபுரம் கவுடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு விஷேச அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு வரும் ஜனவரி 15ஆம் தேதியன்று அதிகாலை 2:09 மணிக்கு சூரியன் மகர ராசியில் நுழைகிறார். இதன் காரணமாக ஜனவரி 14ஆம் தேதி வழக்கமாக இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படாமல், தொடர்ந்து திறந்திருக்கும்.

அதோடு அப்போது பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை 1:45 மணியளவில் மகர சங்கரம பூஜைக்கான பணிகள் தொடங்கும். அதிகாலை 2:09 மணிக்கு மகர சங்கரம பூஜைகள் நடைபெற்ற பின்னர், அதிகாலை2:30 மணிக்கு வழக்கம்போல் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பதிலாக 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்று, நண்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். பகல் 1 மணிக்கு பின்பு, மாலையில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை முடிந்த பின்னர் தான் பக்தர்கள் 18ஆம் படியேற அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருப்பதால், போலீசார் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து சன்னிதானம் நோக்கி அனுப்பு வருகின்றனர். அதிக அளவில் கூட்டம் இருப்பதால், சுமார் 10 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய முடிகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like