பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அப்பல்லோவில் அனுமதி..!
பட்டிமன்றத்தின் மூலம் உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்றவர் பாரதி பாஸ்கர். கெமிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ படித்துள்ள இவர், உலகின் முன்னணி தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். பணிகளுக்கிடையே, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து தொடர்ந்து பேசிவந்தார்.
சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் பாரதி பாஸ்கர் - ராஜா ஆகியோரின் பேச்சுக்குதான் அதிக பாராட்டு கிடைக்கும். பாரதி பாஸ்கர் கொடுக்கும் ஒவ்வொரு கவுன்ட்டரும் அவ்வளவு ரசிக்கவைக்கும். சமீபத்தில், சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு, மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என, முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.