பெண்களுக்கு எதிரான வழக்குகளை மெத்தனப் போக்குடன் தி.மு.க., அரசு கையாள்கிறது - இபிஎஸ் குற்றச்சாட்டு..!
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல்துறை வழக்கம் போல் மிகவும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு புகாரளித்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டதால், இக்குற்றம் தொடர்ந்து நடைபெற்றதாக தகவல்கள் வருகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் வந்தால், அதன் தீவிரத் தன்மை உணர்ந்து, முறையாக விசாரிக்க வேண்டும் என்பது காவல் துறைக்கு தெரியாதா? பெண்களுக்கு, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படும் நிலையை உருவாக்கியதோடு மட்டும் அல்லாமல், பெண்களுக்கு எதிரான வழக்குகளை மெத்தனப் போக்குடன் கையாளும் தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இவ்வழக்கில் தொடர்புள்ள கயவர்கள் அனைவருக்கும் கடுமையான சட்டபூர்வ தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதுடன், அத்தகைய புகார்கள் மீது தாமதமின்றி தீவிர விசாரணை மேற்கொள்ளவும் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.