ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துக்களை யானைகள் பெயரில் எழுதிவைத்த நபர்!
இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்துக்களை தான் வளர்க்கும் இரண்டு யானைகளுக்கு ஒருவர் எழுதிவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த அக்தர் இமாம் என்பவர் யானைகளுக்காக அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் தான் செல்லமாக வளர்க்கும் மோதி மற்றும் ராணி என்ற யானைகளுக்காகத் தனது நிலத்தை அவற்றின் பெயரில் எழுதி வைத்துள்ளார். தனது மரணத்திற்குப் பிறகு இரு யானைகளும் அனாதைகளாக ஆகி விடக்கூடாது என்று கூறியுள்ள அக்தர் இமாம், தனது நிலத்தை யானைகள் பெயரில் எழுதி வைத்துள்ளார். யானைகள் இரண்டும் பலமுறை தன் உயிரை காப்பாற்றியுள்ளன என்று கூறியுள்ள அவர், ஒரு முறை துப்பாக்கிகளுடன் ரவுடிகள் தன்னை தாக்க வந்த போது யானைகள் தான் காப்பாற்றின என்று கூறியுள்ளார்.
ஆனால் யானைகள் பெயரில் சொத்துக்கள் எழுத சட்டத்தில் இடம் இல்லை என்பதால், அவற்றை பராமரிக்க அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், 2 கோடி ரூபாயை டெபாசிட் செய்து, அந்த பணத்தைக் கொண்டு யானைகள் பராமரிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in