எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம்..!
சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. கூட்டணி சரியாக அமையவில்லை என கூறினார்கள். கூட்டணி வரும், போகும். ஆனால் கொள்கை நிலையானது. தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சியை அமைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் 2021-ம் ஆண்டு 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது.
சட்டப்பேரவை நாட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு காரணம் பயம்தான். அ.தி.மு.க.வை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை என்பார்கள். ஆனால் நான் பேசும்போது கட் செய்கிறார்கள். சட்டப்பேரவையில் நான் பேசியதை ஒளிபரப்பி இருந்தால் தி.மு.க. அரசே இருந்திருக்காது.
200 தொகுதிகளில் வெற்றி என தி.மு.க. பகல் கனவு காண்கிறது. அ.தி.மு.க.வின் எழுச்சி, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி. 2026 தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும்.
234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். 2026 சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.