கணவருடன் வாழ மறுத்த மனைவி: காவல் நிலையம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணவன்!
சேலம் ஆத்தூர் நகர காவல் நிலையம் முன்பு மனைவியை சேர்த்து வைக்க கோரி கணவன் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் குரங்குச் சாவடி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (29) கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப சண்டையில், மனைவி ஜமுனா ராணி கடந்த 6 மாதமாக ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் உள்ள அவரது தந்தை வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தங்கியுள்ளார். தங்கராஜ் முல்லைவாடிக்கு சென்று தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும் ஜமுனா ராணி வர மறுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து முல்லைவாடிக்கு வந்த தங்கராஜ் ஆத்தூர் நகர காவல் நிலைய போலீசாரிடம் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கமாறு கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரிப்பதாக கூறி தங்கராஜை அனுப்பி வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை ஆத்தூர் நகர காவல் நிலையம் வந்த தங்கராஜ் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விரக்தியில், காவல்நிலையம் அருகே இருந்த கடையில் காய் நறுக்கும் கத்தியை எடுத்து சென்று காவல்நிலையம் முன்பு கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட போலீசார் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கராஜை தூக்கி சென்று ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவல்நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Newstm.in
newstm.in