பாழைடைந்த கிணற்றில் இரண்டரை வயது குழந்தை பிணமாக மீட்பு!
விளாங்குறிச்சியில் இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ். இவர் தனது மனைவி காஞ்சனா மற்றும் இரண்டரை வயது குழந்தை அம்ருதாவுடன் விளாங்குறிச்சியில் உள்ள குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு குழந்தையுடன் காஞ்சனா வீட்டின் உள்ளே உள்ள அறையில் தூங்கியுள்ளார்.
அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் சிலர் வீட்டின் வெளியே உள்ள கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அதிகாலை 2 மணியளவில் உறக்கம் கலைந்த காஞ்சனா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கியுள்ளார். இதையடுத்து வழக்கம் போல் காலை 5 மணியளவில் எழுந்த காஞ்சனா அருகில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், வீட்டின் வெளியே சென்று விளையாடி கொண்டிருக்கலாம் என அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து உறவினர்களும் குழந்தையை தேட ஆரம்பித்தனர். வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அம்ருதா கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே கிணற்றில் கயிற்றை கட்டி இறங்கி குழந்தையை தூக்கினர்.
குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in