புயலை கிளப்பும் சபரிமலை விவகாரம்.. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது.. உச்சநீதிமன்றம்
சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்ற பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையின் போது, வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உத்தரவுக்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்தது. இதனால் இந்த ஆண்டும் பெண்கள் சபரிமலை செல்வோம் என பிந்து அம்மனி உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதனிடையே சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும், சபரிமலை வர விரும்பும் பெண்கள் உரிய அனுமதி பெற்று கடிதத்தை கொண்டு வர வேண்டும் என கேரள அரசு தெரிவித்தது.
மேலும், கடந்த மாதம் சபரிமலை செல்வதற்காக கேரளா வந்த பிந்து அம்மனி மீது பெப்பர் ஸ்பிரே தெளிக்கப்பட்டது. இதையடுத்து, சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிந்து அம்மனி, ரெஹானா பாத்திமா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, புயலை கிளப்பும் சில விவகாரங்களில் சபரிமலையும் ஒன்று.
கோயிலில் போலீசாரை நிறுத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது. ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு மட்டுமே தொடரும் என உத்தரவிட்டார். மேலும், சபரிமலையில் இறுதி தீர்ப்பு எதுவும் இல்லை, 7 பேர் அமர்வில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த மறு சீராய்வு மனு மீது விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
Newstm.in
newstm.in