உயர்நீதிமன்ற உத்தரவு கூட தெரியாதவர் முதலமைச்சராக இருப்பதற்கு தகுதியில்லை: டிராபிக் ராமசாமி
உயர் நீதிமன்ற ஆணை கூட தெரியாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அப்பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லை என்று டிராபிக் ராமசாமி விமர்சித்துள்ளார்.
கோவை ரயில் நிலையத்தில் வாகன நிறுத்ததில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில், டிராபிக் ராமசாமி இன்று நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது, வாகனம் நிறுத்தும் இடத்தில் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்வதாக குற்றம் சாட்டிய அவர், ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வாகனங்களை இலவசமாக பாதுகாக்க வேண்டும், அதைவிடுத்து அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் அரசாணையை ரத்து செய்ய சொல்லி நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
ரயில்நிலையத்தின் முன் பகுதியிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் ரயில் நிலையத்தின் பின்புறமுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இரு சக்கர வாகனத்திற்கு 10 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாயும், காருக்கு 50 ரூபாய்க்கு 100 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் கூறிய அவர், ஒப்பந்ததாரர்களிடம் 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் ரசீது மட்டுமே இருப்பது எப்படி?என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொடிக்கம்பம் வைப்பதற்கு காவல்துறையிடம் அனுமதி வாங்கி இருப்பதாகவும், உயர்நீதிமன்றம் பேனருக்கு மட்டும்தான் தடை விதித்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், உயர் நீதிமன்ற ஆணை கூட தெரியாதவர் முதலமைச்சராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும், கோவையில் கொடிக்கம்பம் விழுந்து அடிபட்ட விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வரும் 6ம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாகவும் கூறினார்.
Newstm.in
newstm.in