திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்ட 130 பவுன் நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் கொள்ளை!
கோவையில், பில்டிங் காண்ட்ராக்டர் வீட்டில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள 130 பவுன் தங்க நகைகள், ரூ.15 லட்சம் ரொக்க பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் அருககேயுள்ள லூனாநகர் அப்பாஸ் கார்டன் 2வது வீதியில் குடியிப்பவர் கனகராஜ் (59). இவர் பில்டிங் காண்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சசி(50) என்ற மனைவியும், பிரவீன்ராஜ் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இன்ஜினியரான மகன் பிரவீன் ராஜ் தனது தந்தையுடன் இணைந்து வேலை செய்து வருகிறார். மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் நேற்று சுமார் பிற்பகல் 3 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கோவையிலுள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். மாலை 7 மணிக்கு வீடு திரும்பும்போது, வீட்டின் முன்பகுதியில் கட்டி இருந்த வெளிநாட்டு நாய் (கிரேட் டேன்) மயங்கி கிடந்துள்ளது.
மேலும் முன்பக்க கதவின் தாழ்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டிலுள்ள பிரோவை உடைத்து அதில் இருந்த 130 பவுன் நகைகள், 15 லட்சம் பணம், 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. அதோடு வீட்டில் சுற்றி மாட்டப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் திருப்பி வைக்கப்பட்டு, அதன் பதிவுகளை எடுத்து சென்றுள்ளனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வைத்து அங்குள்ளவற்றை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சகோதரியின் திருமணத்திற்காக சிறிது சிறிதாக சேர்த்து வைக்கப்பட்ட மொத்த நகையும், கடனாக வாங்கப்பட்ட ரூ.15 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், காவல்துறையினர் விரைந்து நகைகளை மீட்டு கொடுக்கவேண்டும் எனவும் பிரவீன் ராஜ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
Newstm.in
newstm.in