ஈரோடு டூ கொல்கத்தாவுக்கு சைக்கிள் பயணம்.. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.!
தமிழகத்தில் இருந்து சைக்கிள் மூலம் கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டவர்களை மேட்டூர் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொல்கத்தாவைச் சேர்ந்த 5 பேர் தங்கியிருந்து டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், முழு முடக்கம் கொண்டுவரப்பட்டதால் வேலை இல்லாமல் தவித்து வந்த அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
கையில் இருந்த பணமும் தீர்ந்ததால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்தனர். இதனால் சைக்கிள் மூலம் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி, ஒருகேன் தண்ணீர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டு சைக்கிள் மூலம் சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு செல்ல முடிவு எடுத்து புறப்பட்டனர்.
மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே சென்றபோது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரித்துள்ளனர்.
அப்போது கொல்கத்தா செல்வதாக அவர்கள் கூறினர். அதனை ஏற்க மறுத்த போலீசார், அவர்களை தங்கியிருந்த இடத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் தொழிலாளர்கள் 5 பேருக்கும் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
newstm.in