ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஹெல்மெட் விதியை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை பொதுமக்கள் பின்பற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், "இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். அதே போன்று கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். ஹெல்மெட் அணியும் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை காவல்துறை மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
தொடர்ந்து நடந்த வழக்கின் அடுத்த விசாரணையில், ஹெல்மெட் விதியை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை தமிழக அரசு செயல்படுத்தாமல் உள்ளது என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளித்த டிஜிபி ராஜேந்திரன், "இருசக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து செல்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது விரைவில் அமல்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என பதிலளித்தார்.
பின்னர் நேற்று இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதனைத்தொடர்ந்து இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஹெல்மெட் விதியை கட்டாயம் அமல்படுத்த வேண்டும், 2015ம் ஆண்டு நீதிபதி கருணாகரன் பிறப்பித்த உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தொலைக்காட்சி, பத்திரிகை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
newstm.in
newstm.in