குணமடைந்த நபருக்கு 70 நாட்கள் கழித்து மீண்டும் கொரோனா.. சீனாவில் அதிர்ச்சி..!
சீனாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்த நபர்களுக்கு 60, 70 நாட்கள் கழித்து மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவிய சீனா கடுமையாக பாதிக்கப்பட்டது. வூகான் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு பெரும் போராட்டத்தை சந்தித்தது. இதனால் அங்கு கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் சீனா உண்மையை மறைப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பிய நபர்களுக்கு பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா இல்லை என முடிவுகள் வந்தன.
ஆனால், குணமடைந்தவர்களுக்கு சுமார் 60, 70 நாட்கள் கழித்து பரிசோதனை செய்யப்பட்டதில் பலருக்கு கொரோனா இருப்பதாக முடிவுகள் வந்தன. அதில் பலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சி.
இதனால், மருத்துவர்களும், வல்லுநர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்கள் 60 நாட்கள் கழித்து மீண்டும் நோய் தொற்றுக்கு ஆளானது குறித்த விவரங்களை சீனா துல்லியமாக வெளியிடவில்லை. ஆனால், இதுபோல் 12-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கொரோனா சந்தேகம் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உலக நாடுகளின் அறிவுறுத்தலாக உள்ள நிலையில், 60 நாட்கள் கழித்தும் கொரோனா உறுதி செய்யப்படுவது அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
அதேசமயம், குணமடைந்த நோயாளிகளின் உடற் பாகங்களில் கொரோனா வைரஸ் தங்கியிருக்கக் கூடும் என்பதால் மீண்டும் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால், அது பெரிய அளவு ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் தென்கொரிய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
newstm.in