தமிழக காவல்துறையில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் ஒருவர் சிகிச்சைப் பலனன்றி உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நாகராஜன்(32) சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். பாரிமுனை தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த இவர் கடந்த 3ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 4ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை நாகராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கெனவே சென்னை காவல்துறையில் மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் மூன்றாவது காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆயுதப்படை பிரிவில் முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in