ஒரே நாளில் காவலர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று!
கொரோனாவை எதிர்த்து முன்நின்று போராடும் களப்பணியாளர்களில் காவல்துறையினர் முக்கியமானவர்கள். இரவு, பகல் பாராமல் அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் ஒரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போத்தனூரை சேர்ந்த 4 காவலர்கள், குனியமுத்தூர் மற்றும் ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த தலா ஒருவர் என 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னதாக அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்த காவலர்கள் 344 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், ஒரு பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் மீதம் உள்ள 180 காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
சீல் வைக்கப்பட்ட பகுதியில் அவர்கள் பணியாற்றியதால் அதன்மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட 4 பேர் போத்தனூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவல்நிலையத்தை மூடவும், தற்காலிகமாக ஒரு சில நாட்களுக்கு மண்டபத்தில் இயங்கவும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார். அங்கு பணியாற்றியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in