ஊரடங்கிற்கு பின் கொரோனா தொற்று குறையும் - திட்டங்களை அறிவித்த ஆணையர் பிரகாஷ் !
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் கடுமையாக போராடி வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை மாநகராட்சியில் வீடு வீடாக சென்று பரிசோதனைகள் செய்வது, மருத்துவ முகாம்கள் என பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக நாள்தோறும் நடைபெறும் மருத்துவ முகாம்கள் பெரிதும் பயனளிக்கும் வகையில் உள்ளது. வீட்டு தனிமைக்காக HQIMS- FOCUS VOLUNTEER என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு ஒரு தன்னார்வலரை நியமித்து தனிமைபடுத்துவர்களை கண்காணிக்க உள்ளதாகவும், Focus Volunteerகளுக்கு தனியாக பதிவேடு வழங்கப்பட்டு 14 நாட்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களின் நடவடிக்கை அவர்கள் கண்காணிக்க வேண்டும்.
சர்வதேச விமானங்களில் வருபவர்கள், மருத்துவமனைகளில் இருந்து குணமாகி வந்தவர்கள், தனியார் மருத்துவமனையில் இருந்து குணமாகி வந்தவர்கள், வீடுகளில் உள்ள தொடர்புகள் மூலம் பாதிப்பு அடைந்தவர்கள், மற்ற நபர்கள் மூலமாக பாதிப்பு ஏற்பட்டவர்கள், வேறு மாவட்ட மாநிலங்களில் சாலை, ரயில், விமானம் மூலம் வருபவர்கள், முகாம்களில் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டவர்கள், காவல்துறையினர் கண்காணித்து அளிக்கும் பட்டியலில் வருபவர்கள் என 18 வகையாக நபர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நல்ல பலனளித்து வருவதாகவும் தெரிவித்தார். அண்ணாப் பல்கலைகழகத்தில் 2,000 படுக்கைகள் இந்த வார இறுதியில் தயாராகும் என்ற அவர், ஐஐடியில் 1,200 படுக்கைகளும், அத்திப்பேட்டை குடியிருப்பில் 4,200 படுக்கைகளும் கூடுதலாக தயாராகி வருகிறது என்றார்.
மற்ற கட்டிடங்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதால் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் விடுதிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை என்றும் மாணவர்கள் விடுதிகளை வழங்குவதில் சில சிக்கல் இருப்பதால் மற்ற இடத்தில் தேவையான படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
தற்போது நடைபெற்று வரும் 12 நாள் ஊரடங்கில் பல நன்மைகள் கிடைக்கும் என்றும் வாகனங்கள் இயக்கம் கடுமையாக்கப்பட்டுள்ளதால் தற்போது நகரில் 10% வாகன போக்குவரத்து தான் இயக்கத்தில் உள்ளது என்றார். ஊரடங்கிற்கு பின் பெருவாரியான தொற்று குறையும் என நம்புகிறோம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 13 ஆயிரம் வீடுகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டர்கள் தொடர்பு கொண்டு உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
newstm.in