திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா.. தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்று..!
திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜ் (65). இவர், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், எம்எல்ஏ செல்வராஜுக்கு சளி மற்றும் இருமல் இருந்தது.
இதன் காரணமாக சந்தேகமடைந்த அவர் திருப்பூர் - அவினாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவுகள் வரும் வரை தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதற்கிடையே இந்த பரிசோதனை முடிவுகள் வந்தது.
இதில், எம்எல்ஏ செல்வராஜுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து அவர், அரசு விழாக்கள் மற்றும் கட்சி விழாக்களில் கடந்த 2 நாட்கள் பங்கேற்றதால், தன்னுடன் பணியாற்றியவர்களை கொரோனா பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நல உதவி வழங்கிய எம்எல்ஏ செல்வராஜுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், தெற்கு தாலுகாவைச் சேர்ந்த தலைமையிடத்து துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் அருள்குமார், வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.