உதவி வழக்கறிஞருக்கு கொரோனா.. சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலவும் அச்சம்..!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் ஒருவரின் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவிற்கு இடையே பல்வேறு இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதித்தாலும் அந்த நிறுவனம் அடைக்கப்பட்டு அங்கு பணிபுரிந்தவர்கள், வந்து சென்றவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனை நடத்தப்படும். அந்த வகையில் சில மருத்துவமனைகள், சென்னை ஃபீனிக்ஸ் மால் உள்ளிட்டவை அடங்கும். இந்த வரிசையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சேர்ந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் ஒருவரின் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் உயர்நீதிமன்ற வளாகத்தில் கொரோனா அச்சம் பரவியுள்ளது.
இதுதொடர்பாக 7 நீதிபதிகளுடன் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்திய தலைமை நீதிபதி, நீதிமன்றத்தின் 2வது வளாகத்தை முழுவதுமாக கிருமிநாசினியால் சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
அத்துடன் நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் ஆகிய இருவரின் அறைகளையும் கிருமிநாசிகள் கொண்டு தூய்மைப்படுத்த அறிவுறுத்தியுள்ளார். இவர்கள் இருவரும் 2வது வளாகத்தில் இந்த வார அமர்வில் வழக்குகளை விசாரித்தவர்கள் என்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
newstm.in